
சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை தரப்படுவதுண்டு, காரணம், இவர் பாடல்களில் வழக்கமான சித்தர் கருத்துக்கான யோகம், குண்டலினி, நிலையாமை. வாசி கருத்துக்களுடன் புரட்சிகரமான கருத்துக்களையும் கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும் கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில் நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறினார் என்பதை இவரின் பாடல் கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி இவர் முதலில் நாத்திகராக இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக மாறி திருமழிசை ஆழ்வாரானார் என்றும் கூறுவதுண்டு.
சிவவாக்கியரின் பாடல்களும் திருமழிசை ஆழ்வார் பாடல்களும் சந்தத்தில் மட்டுமே ஓரளவு ஒத்துப் போவதாலும் இவர் பாடல் சாயலில் ஏனைய சித்தர் பாடல்களும் இருப்பதால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.