1. மனிதர்கள் அனைவருக்கும் சுக்கிரன் பலம் பெற்று இருப்பதே விரும்புகிறோம், காரணம் வளமான வாழ்க்கைக்கும், வசதியான வாழ்க்கை ஆடம்பரம், காதல், சிற்றின்பம் என அனைத்தும் சுக்கிரனால் மனிதர்களுக்கு வழங்கப்படுபவை.
2. சுக்கிரனின் அம்சமாக கருதப்படும் மஹாலஷ்மி வாசம் செய்யும் விஷயங்கள் மனிதன் கடைபிடிப்பதன் மூலம் சுக்கிரனை பலம் பெற செய்யலாம். எப்பொழுதும் தூய்மையாக தன்னை சுற்றியுள்ள இடத்தை வைத்திருப்பதன் மூலமும், அணிந்திருக்கும் ஆடைகளில் தூய்மையும் மற்றும் நறுமணமும் மிகுந்ததாக வைத்திருத்தல் அவசியம்.
3. பன்னிரண்டாம் பாவம் என சொல்லக்கூடிய அயன சயன போக ஸ்தானம் இந்த பன்னிரெண்டாம் பாவகத்தில் சுக்கிரன் எப்பொழுதும் அவர் வசமே. கால புருஷனின் பன்னிரெண்டாம் பாவகத்தில் சுக்கிரன் உச்சம் அடைகிறார். ஆகையால், படுக்கையறை சுத்தமாகவும் நறுமண மிகுந்ததாகவும் வைத்திருக்கும் பொழுது சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.
4. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு மற்றும் தாமரை பூக்கள் கொண்டு மகாலட்சுமி பூஜை செய்வது, எப்பொழுதும் நறுமணம் மிகுந்த மலர்களால் வீட்டை அலங்கரிப்பது கூட சுக்கிரனை பலப்படுத்தும்.
5. காதல், திருமணம் மற்றும் பண முடக்கம் போன்ற விஷயங்களில் அவதிப்பட்டால் நிச்சயமாக சுக்கிரன் நிலைமை கெட்டிருக்கும் அல்லது ஜாதகத்தில் பாவர்கள் தொடர்பு பெற்றிருக்கும் அல்லது வீட்டின் தென் கிழக்கு மூலை சுத்தமாக இல்லாமல் இருந்தால் கூட ஒரு வகையில் பணம் முடக்கத்திற்கு காரணமாக அமையலாம். (தென் கிழக்கு மூலை மற்றும் வீட்டின் வடக்கு பக்கம் சுத்தமாக வைத்திருத்தல் அவசியம் இந்த வடக்கு மற்றும் தெற்கு மூலைகளில் சுக்கிரன் வாசம் செய்வார்).
6. ஆண்களின் பாதத்தில் சுக்கிரனின், அம்சம் நிறைந்துள்ளது ஆகையினால்தான் மகாலட்சுமி கூட பெருமாளின் பாதத்தை பிடித்திருப்பது போல கோவில்களில் காண்கிறோம். காலப்போக்கில் இது ஆணாதிக்கம் எனக்கூறி மருவி விட்டது. ஆண்களின் பாதத்தில் சுக்கிரனின் அம்சம் இருப்பதால் வீட்டில் இருக்கும் பெண்கள் ஆண்களின் பாதத்தை தொட்டு வணங்குவதன் மூலமும் சுக்கிரனை பலப்படுத்திக் கொள்ளலாம்.
7. தினமும் சுக்கிர காயத்ரி மந்திரம் கேட்பது, ரோஜா பூக்கள் நிறைந்த தண்ணீர் பயன்படுத்துவது. வாசனை திரவியங்கள் பயன்படுத்துவது முதலானவை சுக்கிரனை பலப்படுத்தும். வெள்ளி ஆபரணங்கள் வெள்ளி மோதிரம் அணிந்து கொள்ளுதல் போன்றவையும் சுக்கிரனை பலப்படுத்தும்.
8. சுக்கிரன் அடிக்கடி சூரியனிடம் அஸ்தங்கம் அடையும். எப்பொழுதும் சுக்கிரனை பலப்படுத்திக் கொள்வதற்கு, சூரியனின் தயவும் தேவை அதே நேரத்தில் ஒரு விஷயத்தை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டியது, சுக்கிரன் மட்டுமே வாழ்க்கை முழுவதுமான பொருளாதாரத்தை தராது. குருவும், சந்திரனும் நல்ல நிலையில் அவரவர் ஜாதகத்தில் இருப்பது அவசியமும் கூட. தற்காலிகமாக ஏற்படக்கூடிய பண முடக்கத்திற்கு, சுக்கிரனை பலப்படுத்த மேற்கூறிய வழிபாடு முறைகள் நன்மை தரும்.
Credit: Kirthika Swaminathan