கன்யாகுப்ஜம் என்ற நகரில் அஜாமிளன் என்றொரு ஒழுக்கம் கெட்ட பிராமணன் இருந்தான். அவன் தீயவன். அவனுக்குப் பத்து புத்திரர்கள் பிறந்தனர். அவர்களை சீராட்டிப் பாராட்டி மகிழ்ச்சியோடு காலம் கழிய அவன் மிக்க முதுமையை அடைந்தான். அவனுக்குக் கடைசி மகன் நாராயணனிடம் அன்பு, பாசம், நாளுக்கு நாள் அதிகம் ஆக அக்குழந்தையைச் சிறிது நேரம் கூட பிரியாமல் இருந்தான். அவன் மரண படுக்கையில் படுத்தான். அவன் உயிரை எடுக்க மூன்று யமகிங்கரர்கள் வந்தனர். அவர்களைக் கண்டு பயந்து அவன் "நாராயணா! நாராயணா! எங்கே இருக்கிறாய்! ஓடிவா!" எனக் கூவி அழைத்தான். இவ்வாறு மரணகாலத்தில் ஸ்ரீஹரி நாமத்தை உச்சரித்தால் விஷ்ணு பாதர்கள் அங்கே வந்து யமதூதர்களைத் தடுத்தனர். அவ்வாறு தடுத்து அவர்களிடம் எந்தச் செயலைச் செய்தவர்கள் யமதண்டனைக்கு உரியவர்கள் என்று விஷ்ணு பாதர்கள் கேட்டனர்.
சாக்ஷத் ஸ்ரீ ஹரியே வேதம். வேதம் கூறுவதே தர்மம். எல்லாமே சரீரம் படைத்த ஜீவன்கள். அவை குணங்களின் சேர்க்கையால் நல்ல (அ) தீய செயல்களைச் செய்கின்றன. பிரகிருதியின் தொடர்பினால் இழிவான நிலை ஏற்படுகிறது. பகவானிடம் பற்றுதல்களால் அவை மறைந்து விடும். இந்தப் பிராமணன் காமவசனாகி தர்மத்திலிருந்து நழுவினான். ஒரு வேசியுடன் கூடி பிள்ளைகளைப் பெற்றான். எல்லோரிடமும் நிந்தனை பெற்ற இவனை யமதர்மராஜனிடம் அழைத்துச் செல்லப் போகிறோம் என்றனர் யமகிங்கரர்கள். நாராயணர் என்ற பகவான் நாமத்தைக் கடைசி காலத்தில் கூறுபவனிடம் உள்ள சகல பாபங்களும் நீங்கிவிடுகின்றன. இவன் மரணகாலத்தில் பகவன் நாமத்தை நன்கு உச்சரித்ததால் சகல பாப பரிகாரங்களும் செய்தவனாகிறான். எனவே, இவனை நீங்கள் கொண்டு போக வேண்டாம் என்றனர் விஷ்ணு பாதர்கள். மேலும் இவன் மந்திரத்தின் மகிமையை அறியாமலே சொன்னாலும் அதன் நற்பயனை அடைகிறான். எனவே இவன் பாபமற்றவன் என்றனர்.
இவ்வாறு அஜாமிளன் யமபாசத்திலிருந்து விடுவிக்கப்பட்டான். அவன் விஷ்ணு தூதர்களை வணங்கி ஏதோ சொல்ல நினைக்க அவர்கள் மறைந்து விட்டனர். பின்னர் அவன் தான் செய்த அதர்மங்களை எண்ணி மிகவும் பச்சாதாபப்பட்டான். ஏதோ சிறிதளவு புண்ணியவசத்தால் தேவசிரேஷ்டர்கள் தரிசனம் கிடைத்தது. இனி பகவானின் நாம ஸங்கீர்த்தனத்தில் உள்ளத்தை தூய்மையாக்கி, இதயத்தைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்று எல்லா ஆசைகளையும் துறந்து, கங்காத் துவாரத்துக்குச் சென்றான். அங்கே இந்திரியங்களை அடக்கி யோகத்தை அனுஷ்டித்து, மனதைப் பரமபுருஷனிடமே செலுத்தினான்.
ஒருநாள் அஜாமிளனுக்கு விஷ்ணு பார்ஷதர்கள் கண்முன் தோன்ற அவர்களைப் பூஜித்து வணங்கி, தன்னுடலை கங்கையில் அர்ப்பணித்து பார்ஷத சரீரத்தைப் பெற்றான். உடனே விஷ்ணு தூதர்களுடன் அவன் பொன் மயமான விமானத்தில் ஏறி, வைகுண்டத்தை அடைந்தான். அகஸ்திய பகவானிடம் இக்கதையைக் கேட்ட சுகப்பிரம்மம் பரீக்ஷித்துக்குக் கூறினார்.
Credit: Mahabaratham and Ramayanam