திருக்கடையூரில் ஈசன் எமனைக் காலால் உதைத்த வரலாற்றின் ரகசியத் தத்துவம்
காலதேவனைக் காலால் உதைக்கலாமா?
தன் மீதே பாசக் கயிற்றை வீசிய எமனைத் தன் காலால் உதைத்தார் சிவனார். இது புராணம்.
காலம் தவறாமல் தன் கடமையைச் செய்ய வந்த காலதேவனைக் காலால் உதைக்கலாமா? தன்னை ஒரு பக்தன் வழிபட்டுவிட்டான் என்பதற்காக, நீதி வழங்க வந்த நீதி தேவனையே தண்டிக்கலாமா? அப்படியானால், ஆயுள் முடியும்போது அனைவருமே அந்த சிவனை ஆலிங்கனம் செய்துகொண்டு, எமனிடமிருந்து தப்பிவிட மாட்டார்களா? இவையெல்லாம் நியாயமான கேள்விகள்தான்! இவற்றுக்குப் பதில் காண முயலும்போது, புதிய உண்மைகள் வெளிப்படுகின்றன.
எமதர்மன் சர்வேஸ்வரனான சிவனை தினமும் உபாஸிப்பவன். தேவர்கள், மானிடர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், தெய்வத்தை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் என்ற பாகுபாடின்றி, அவரவரின் கர்மவினைகளுக்கேற்ப, காலமறிந்து நீதி வழங்கும் பொறுப்பு அவனுக்கு உண்டு. சிந்தனையின் இருப்பிடம் மூளை என்றால், ஆசாபாச உணர்ச்சி களின் இருப்பிடம் இதயம். எல்லோரும் இறைவனின் திருவடிகளைச் சிரத்தில் ஏற்க விரும்பினார்களென்றால், இறைவனின் திருவடிகள் தன் மார்பிலேயே பதிய வேண்டுமென்று தவமிருந்தான் எமதர்மன்.
உணர்ச்சிகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காமல், சத்தியத்தின் பிரதிநிதியாக நீதி பரிபாலனம் செய்ய, ஈஸ்வரனின் திருவடிகள் தன் இதயத்திலேயே பதியவேண்டும் என, தினமும் ருத்திர தேவனைப் பிரார்த்தித்தான் எமதர்மன். அந்தப் பிரார்த்தனை நிறைவேற, மார்க்கண்டேயன் ஒரு கருவியானான். எமன் பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீதுதான் வீசினான். அதே நொடியில் மார்க்கண்டேயன் இறைவனின் திருமேனியைத் தழுவிவிட்டான். பாசக்கயிறு இறைவனையும் பிணைத்துவிட்டது. எல்லாமே ஈஸ்வரனின் சங்கல்பப்படிதான் நடந்தது.
மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை முதலிலேயே தழுவிக் கொண்டிருந்தால், நிச்சயமாக எமதர்மன் தன் பாசக் கயிற்றை தான் வணங்கும் தெய்வத்தின் மீது வீசத் துணிந்திருக்கமாட்டான். மார்க்கண்டேயன் மீது வீசிய பாசக்கயிறு தன் மீது விழும்படி செய்து, இருவருக்கும் தரிசனம் தந்து, தன் திருவடியை எமதர்மனின் இதயத்திலேயே வைத்து, எமதர்மனின் பிரார்த்தனையை பூர்த்தி செய்தான் இறைவன். ஆனால், அந்தத் திருவடி அம்பிகையின் அம்சமாக அமைந்தது எமதர்மன் செய்த பாக்யம்.
மார்க்கண்டேயனுக்கு 'என்றும் பதினாறு வயது’ இருக்க அருள் செய்து, அவனது பக்திக்கும் ஒரு பரிசு தந்தார் சிவபெருமான். ஈசன் எமனைக் காலால் உதைத்த வரலாற்றில், மற்றொரு ரகசியத் தத்துவமும் உண்டு. சிவபெருமான் உமையருபாகன் அல்லவா! அவன் பார்வதியைப் பாதி உடலாகக் கொண்ட அர்த்தநாரீஸ்வரன்.
அவனது திருமேனியில் இடதுபுறம் அன்னை உமாதேவியின் அம்சம். மார்க்கண்டேயன் மீதும் தன் மீதும் பாசக் கயிற்றை வீசிய எமனைத் தனது இடது காலால்தான் உதைத்தான் ஈசன். (படத்தை பார்க்கவும்) இடப் பாகம் சக்தியினுடையது. எனவே, இது சிவனின் திருவடியல்ல; சக்தி பார்வதியின் திருவடிதான். கடமையைச் செய்த காலதேவனை சிவபெருமான் தன் காலால் உதைக்கவில்லை. மாறாக, தர்மம் தவறாமல் தன் கடமைகளை அவன் தொடர்ந்து செய்ய, அன்னை சக்தியின் அருள் அவனுக்குக் கிடைப்பதற்காக, அன்னையின் பாதமே தர்மதேவனின் இதயத்தைத் தொட்டு, அவனை வைராக்கியமுள்ளவனாகச் செய்தது. அதற்கு இறைவன் ஒரு வாய்ப்பளித்தான். இது திருக்கடவூர் ஸ்தல புராணக் கதை.
கடமையைச் செய்யும்போது, கடவுளென்றும் பாராமல் நீதி தருகிறவன் எமதர்மன். அவன் வெறும் மரண தேவன் அல்ல; உயிர்களை மனிதக் கூட்டிலிருந்து விடுதலை செய்யும் தர்மதேவன். சிவசக்தியின் சங்கல்பத்தின்படி, அவன் உயிர்களைக் கவருகிறான். அவன் நெருங்கும் வேளையிலும்கூட, சிவசக்தியின் அருள் இருந்தால், ஆரோக்கியமும் ஆயுளும் நீடிக்கும் என்பதே இப் புராணக் கதை சொல்லும் தத்துவம். சிவ சிவ
Credit: ஆன்மீகச் சிந்தனைகள்